சங்கிலி வழிநடத்தல் இல்லாத யாழ்ப்பாணம் தலையிழந்த முண்டம் போல் தத்தளித்தது. பறங்கியரின் வழி நடத்தலின் கீழ் வாழ விரும்பாத, சுகவீனமுற்றிருந்த சங்கிலியின் தந்தையான பரராசசேகரன், ‘அரண்மனை வாழ்கையிலும் விட இனி காடே சிறந்தது’ என எண்ணி வன்னிக் காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டார்.
இதனால் வெகுண்ட பறங்கிகள், நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பை விடுத்தார்கள். “பரராசசேகரனைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கோ, அவன் இருப்பிடத்தை அறிவிப்பவர்களுக்கோ இருபத்தையாயிரம் இறைசால் பரிசாக வழங்கப்படும்”. பரராசசேகரன் மீது மிகுந்த மதிப்பும், பாசமும் வைத்திருந்த நாட்டு மக்கள், இந்த அறிவிப்பை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆனால் பரராசசேகரனிடம் முன்பு முதன் மந்திரியாக இருந்த கன்னெஞ்சப்பார்ப்பாண் எனும் கொடியவன், பொருளெனும் பேய்க்கு ஆசைப்பட்டு பரராசசேகரனைத்தேடி வன்னிக் காட்டுக்குள் சென்றான். அங்கு கையில் இளநீரும், தேசிக்காயும் சகிதமாக அலைந்தான்.
மறுபுறம் யாழ்ப்பாணத்தில், சங்கிலியன் ஆட்சியை வெறுத்த அப்பாமுதலி, பரநிருபசிங்கன் போன்ற ஆட்கள், பறங்கியருடன் இணைந்து வீதியெங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். இனிப்புப்பண்டங்களையும் வழங்கினார்கள். இவை எவற்றிலும் அக்கறை காட்டாத மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தார்கள். அரண்மனைக்கு வேலைக்கு வரவும் விருப்பவில்லை.
காட்டினுள் பரராசசேகரனைத் தேடித்திரிந்த பார்ப்பாண், மிகுந்த சங்கடமடைந்தான். எங்கு தேடியும் அரசனைக் காண முடியவில்லை. இதனால் தனக்கு பரிசுத்தொகை கிடைக்காதோ என ஏக்கமடைந்து அங்குமிங்கும் புலம்பித் திரிந்தான். காட்டினுள் கேட்ட கூச்சலை மறைவிடத்தினுள் இருந்து அவதானித்த பரராசசேகரன் அது என்னவாக இருக்கம் என அறியும் ஆவலில் எட்டிப்பார்த்தான். தனக்கு மிகவும் நெருக்கமான மந்திரி துயரத்துடன் அங்குமிக்கும் அலைவதைக் கண்டு குரல் கொடுத்தான்.
“பார்ப்பாண்… பார்ப்பாண்…!”
குரல் வந்த திசையை நோக்கிய பார்ப்பாண், மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். தான் காடு மேடெல்லாம் தேடிய பொருள் இப்படி வலிந்தே சிக்குமென அவன் கனவிலும் நினைக்கவில்லை. இதனால் எழுந்த மகிழ்ச்சியை முகத்தில் குறைத்துக் கொண்டு, ஓடோடிச் சென்று மன்னன் காலில் விழுந்தான்.
அவனை ஆதரவுடன் தூக்கிய அரசன், “ஏன் பார்ப்பாண்? என்ன விடயம்? ஏன் இவ்வளவு சோகத்தில் அலைந்து திரிகிறாய். அதுவும் காட்டில்…?”
“காடா… இதுவா காடு? காடென்பது இதுவல்ல. நீங்கள் இல்லாத நாடே காடு. இது அரண்மனை” என போலிக் கண்ணீர் வடித்தான்.
“அது சரி, இங்கு நீ ஏன் வந்தாய்?”
“நீங்கள் இல்லாத இடத்தில் எனக்கு இருக்கப்பிடிக்கவில்லை. அங்கு பரநிருபசிங்கன் பறங்கியரின் கையாளாக இருந்து கொண்டு கொடுங்கோலாட்சி புரிகின்றான். மக்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை”
“பறங்கிகளால் அழைத்துச் செல்லப்பட்ட சங்கிலி பற்றி ஏதாவது அறிய முடிந்ததா?”
“இல்லை. இல்லவே இல்லை… ஆனால் பறங்கிகள் சங்கிலியை உயிரோடு விடுவார்கள் என்று நான் கருதவில்லை”
“அரண்மனையில் மந்திரிகள், அமைச்சர்கள் எல்லோரும் என்ன செய்கிறார்கள்?”
“பரநிருபசிங்கனது அதட்டலுக்குப் பயந்து வேண்டா வெறுப்பாக, அவன் கீழ் ஊதியம் செய்கிறார்கள். அவர்களுக்கும் வயிற்றுப்பிழைப்பு என்று ஒன்று உண்டு தானே!”
“அதுவும் சரி!”
“அரசே! நீங்கள் மிகவும் களைத்துள்ளீர்கள். அடியேன் கொண்டு வந்திருக்கும் இளநீரைக் குடியுங்கள்” என அரசன் முன் தான் பத்திரமாக வைத்திருந்த இளநீரை நீட்டினான். ஆவலுடன் அதை வாங்கிய அரசன், தன் உடை வாளால் அதைச்சீவி பருகத் தொடங்கினார் . சமயம் பார்த்துக் காத்திருந்த பார்ப்பாண் “அரசே இந்த தேசிப்பழத்தை பிழிந்து இளநீரினுள் விடுங்கள். உடல் ஆரோக்கியமாக இருக்கும்” எனக் கூறினான். தான் இளநீரை அருந்துவதால், அதை வெட்டி விடுப்படி பரராசசேகரன் பார்ப்பாணுக்கு கண்ணைக்காட்டினான். காரியம் கைகூடுவதை நினைத்து மகிழ்ந்த பார்ப்பாண், அரசன் வாளை எடுத்து ஒரு கணத்தில் அரசன் சிரசைக் கொய்தான். அரசனின் தலையற்ற உடல் பூமியில் சாய்ந்தது.
துண்டாக விழுந்த சிரசை பத்திரமாக பொதி செய்து யாழ் நகர் நோக்கி வந்தான் பார்ப்பாண். அங்கு பறங்கித் தளபதியைச் சந்தித்து, தான் கொண்டு வந்த பொருளைக் காட்டி பரிசுத்தொகையை பெறவேண்டும் என்ற ஆவலில் கோட்டைக்குள் சென்று தளபதியைச் சந்தித்தான். பார்ப்பாண் கொண்டு வந்த பொதியைப் பிரித்துப் பார்த்த பறங்கித் தளபதி பிரகன்சா
“என்ன இது?” எனக் கேட்டான்.
“பரராசசேகரனது தலை” என மகிழ்ச்சியுடனும் பேராவலுடனும் கூறிய பார்ப்பாணை நோக்கிய தளபதி
“என்ன செய்தாயடா மூடா” எனக் கத்தினான்.
“நீங்கள் தானே கூறினீர்கள்”
“என்னவென்று?”
“பரராசசேகரனை பிடித்துத்தரும்படி”
“நீ என்ன செய்திருக்கிறாய்?”
“கொணர்ந்துள்ளேன்”
“எதை?”
“தலையை!”
“நான் தலை கேட்டேனா?”
“நான் அவரைக் கொண்டு வந்தால், நீங்கள் சிரச்சேதம் செய்வது உறுதி. அதை நானே செய்துவிட்டேன். எனக்குரிய பரிசைத் தாருங்கள்”
நொடியும் யோசிக்காத பிரகன்ஸா “உனக்குரிய பரிசு இது தான்” என தன் இடையில் இருந்த உடைவாளை எடுத்து பார்ப்பாணின் சிரசைக் கொய்தான். பார்ப்பாணது பேராசை, பெரும் தரித்திரமாகப் போய்விட்டது.
இதேவேளை பறங்கிகளால் அழைத்துச் செல்லப்பட்ட சங்கிலியின் நிலையோ, பரிதாபத்துக்கிடமாகப் போய்விட்டது.
சாதிக்க வருவான்…


6 comments:
சோதனைமேல் சோதனை தாங்காது பூமி.
வேதனைதான் வாழ்க்கையென்றால்....
//“பரராசசேகரனை பிடித்துத்தரும்படி”
“நீ என்ன செய்திருக்கிறாய்?”
“கொணர்ந்துள்ளேன்”
“எதை?”
“தலையை!”
“நான் தலை கேட்டேனா?”//
இதைத்தான் எள் என்று சொல்லவும் எண்ணையுடன் நிற்கிறது என்று சொல்லுறவையோ
வழக்கம் போலவே விறூவிறுப்பா போகுது கதை! வரோ, உங்களுக்குள்ள ஏதோ ஒண்டு இருக்கப்பா! ( திறமை )
நல்ல முயற்சி + உழைப்பு! வாழ்த்துக்கள்!
வணக்கம் வரோ!இப்போதெல்லாம் சரித்திரம் படிக்க பொறுமை(மனது?)இல்லை.ஆறுதலாக எல்லாவற்றையும் சேர்த்து படிப்பேன்!
வாசிக்கிறன் வாசிக்கிறன்.இன்னும் இங்க வரைக்கும் எட்டிப் பிடிக்கேல்ல வரோ !
முந்தய அத்தியாயங்களை படித்து வருகிறேன் நண்பரே...
Post a Comment